எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வெளிவந்த காதல்ன்னா சும்மா இல்லை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த ஷர்வானந்த் தமிழ் திரை உலகில் மிக பிரபலமடைந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷர்வானந்த் தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆக தயாரான ஜானு திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.

கடைசியாக நடிகர் ஷர்வானந்த் நடித்த ஒகே ஒக்க ஜீவிதம் படம் தமிழில் கணம் என்ற பெயரில் வெளியானது. நல்ல ஒரு FEEL GOOD திரைப்படமாக ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலும் பெற்ற கணம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 35 வது படமாக உருவாகும் ஷர்வா35 படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக கடந்த 4 தினங்களுக்கு முன்பு தனது படப்பிடிப்பை முடித்து இரவு 2 மணி அளவில் ஹைதராபாத்தில் இருக்கும் பிலிம் நகர் ஜங்ஷனிலிருந்து காரில் புறப்பட்ட நடிகர் ஷர்வானந்த் விபத்தில் சிக்கினார். எதிரே வந்த பைக்கில் மோதாமல் தப்புவதற்காக முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஷர்வானந்த் கார் சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக எந்த காயங்களும் இல்லாமல் ஷர்வானந்த் தப்பித்தார். திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் நிலையில் நடிகர் ஷர்வானந்த் விபத்தில் சிக்கியது அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் நடிகர் ஷர்வானந்த் தெரிவித்தபடியே திட்டமிட்டபடி அவரது திருமணம் நேற்று ஜூன் மூன்றாம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் எனும் மிகப்பெரிய அரண்மனையில் நடிகர் ஷர்வானந்த் மற்றும் ஐடி ஊழியரான ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர்கள் ராம் சரண், சித்தார்த், அதிதீராவ் ஹைதாரி, தயாரிப்பாளர்கள் வம்சி,விக்ரம், தில் ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருகிற ஜூன் 9ஆம் தேதி நடிகர் சரவணன் ரக்ஷிதா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் ஷர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி ஜோடிக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகை சேர்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டியின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…