சம கால தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை தன் நடிப்பினால் கவர்ந்து குறுகிய காலத்தில் ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை துஷாரா விஜயன். கடந்த 2019 ல் வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான துஷாரா விஜயன் பின் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து கடந்த 2021ல் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். சார்பட்டா பரம்பரை படம் வெளியான போது துஷாரா விஜயன் ஏற்று நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. மேலும் இந்த படத்திற்காக துஷாரா விஜயனுக்கு நிறைய விருதுகளும் கிடைத்தது. அதன்பின் மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்தார். இந்த படத்தில் சிக்கலான கதாபாத்திரம் என்பதால் வரவேற்பு பெற்ற நிலையில் விமர்சனத்தையும் சந்தித்து வந்தார் துஷாரா விஜயன், இருந்ததும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் கடந்த மே மாதம் 26ம் தேதி அருள்நிதி நடிப்பில் வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பேசப்படும் கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களிலும் நடித்து வரும் துஷாரா விஜயன் தற்போது பல முக்கிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதில் குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துஷாரா நடிக்க விருக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. விரைவில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் துவங்கப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு நேர்காணலில் நடிகை துஷாரா விஜயன் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே ஏன் இவ்வளவு மாதம் இடைவெளி என்ற கேள்விக்கு.. துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்டவை,

நட்சத்திர நகர்கிறது படம் வந்து 6,7 மாசம் ஆகிறது அடுத்த படம் இப்போதான் ரிலீஸ் ஆகிறது. துஷாரா க்கு படமே வரலையேன்னு அர்த்தம் இல்லை.. எனக்கு நிறைய படங்கள் வருகிறது. ஆனால் நான் சில படங்களை கதாபாத்திரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து வருகிறேன்.

சிலர் கதை கொண்டு வந்தால் அந்த கதை என்னை பாதிக்க வேண்டும். அப்படி பாதிக்கவில்லை என்றால் நான் அந்த கதாபாத்திரத்தை நேர்மையாக பண்ண முடியாது. மற்றொன்று ரொம்ப பவரோடு இருக்க கதாபாத்திரத்தை கொண்டு வராங்க.. நான் அதுக்கு இன்றும் ரெடி ஆகல. பயம் கிடையாது. நான் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. அது தெரிஞ்சிக்கிட்ட பின்பு தான் நான் அதை பண்ண முடியும்.

அப்படி மீறி நான் பண்ணிட்டா என்னாலே அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியாது. வெறும் பாட்டு டான்ஸ் மட்டுமே கதையில் வருகிறேன் என்றால் நான் ஆல்பம் பாடல்களை செய்து விட்டு போயிடலாம். ஆனால் எனக்கு கதையில் நல்ல கதாபாத்திரம் வரனும்.. நான் திரையில் அழுதா ரசிகர்கள் அதோடு ஒத்து போகனும்.. எனக்கு அதுதான் வேண்டும். நாலு படம் பண்ணாலும் நறுக்குனு பண்ணனும் அதுதான் எனக்கு வேண்டும். அடுத்த பத்து வருஷத்துக்கு நான் நடிச்சிட்டு தான் இருப்பேன். என்றார் நடிகை துஷாரா விஜயன்.

மேலும் நடிகை துஷாரா விஜயன் நமது கலாட்டா பிளஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..