கமல் ஹாசன், அஜித் குமார் , சூர்யா, சிலம்பரசன், தனுஷ், சியான் விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு அவர்களது திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனித்துவமான காதல் படங்களையும் ஆக்ஷன் நிறைந்த பக்கா கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி போன்ற மொழி துறையிலும் அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்து திரையுலகின் முன்னணி இயக்குனராக பல ஆண்டுகளாக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. சிம்புவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் கௌதம் மேனன் சியான் விக்ரம் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் என்ற படத்தின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். இப்படத்தையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் சிம்புவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ படத்திற்கான வேலையில் இறங்கவுள்ளார்.

இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் அசத்தி வந்த கௌதம் மேனன் சமீப காலமாக நடிகராகவும் கவனம் பெற்று வருகிறார். முன்னணி நட்சத்திரங்கள் , முன்னணி இயக்குனர்களின் படங்களில் தற்போது கௌதம் மேனன் பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் வாசு தேவ் மேனன் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘விடுதலை 1’ படத்தின் வெற்றியை அடுத்து அப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார் கௌதம் மேனன்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் அவர்கள் கலந்து கொண்டு தன் திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்களை மீண்டும் பார்க்கும் ஆவல் உண்டா? என்ற கேள்விக்கு,

"நான் இப்போ வேட்டையாடு விளையாடு படம் தியேட்டர் போய் பார்க்கல.. சில படங்கள் வீட்ல பார்க்கனும் னு சொன்னாங்கனா அப்போ போட்டு பார்ப்போம். சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் 2,3 தடவை போட்டு பார்த்தோம். விருந்தினர் வந்தா அவங்க பார்க்கலனு சொன்ன அவங்களோட சேர்ந்து பார்த்தேன். காக்க காக்க படம் அப்பப்போ டிவில போட்டா பார்ப்பேன். அப்படி படங்கள் பார்க்கும் போது அந்த படப்பிடிப்பு தளத்தில் நடந்ந விஷயங்கள் நினைவுக்கு வரும்.." என்றார்.

மேலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கதை சொல்ல முன் வந்ததுண்டா என்ற கேள்விக்கு."எனக்கு ரஜினி சாருடன் பணியாற்றுவதில் விருப்பம் தான் ஆனால், அவரை சுற்றி இருக்கும் எதிர்பார்ப்பு, பெருசா பண்ணனும் ன்ற அழுத்தம். இதெல்லாம் தான் அவர் கிட்ட கதை சொல்லவே பயமா இருக்கு.. அதனால் நம்ம வட்டாரத்துக்குள்ளே பண்ணிட்டு போயிடுறேன்.." என்றார் இயக்குனர் கௌதம் மேனன்.

மேலும் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..