தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. கடந்த 1999 விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பாலா. எளிய மக்களின் உணர்வுகளையும் அவர்களின் வாழ்வையும் படமாக எடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர். அதன்படி 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்', 'பரதேசி', 'அவன் இவன்' என்று பல மெகா ஹிட் படங்களை பாலா கொடுத்து வந்தார். குறிப்பாக நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இருந்தவர் இயக்குனர் பாலா.

இவரது கடந்த சில படங்கள் மக்களிடம் சரியாக வரவேற்பு கிடைக்காமல் போக, நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்துடன் மீண்டும் திரைத்துறையில் வந்தார். அதில் மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் சூர்யாவுடன் இணையப் போவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்புடன் அட்டகாசமான முதல் பார்வையும் வெளியானது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி தீர்த்தனர். காரணம் சூர்யா பாலா கூட்டணி என்றாலே ரசிகர் மத்தியில் அவ்வளது விருப்பம். ஒரு தனித்துவமான கதையிலே இருவரும் இதுவரை இணைந்துள்ளனர். அதானாலே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்தது. வணங்கான் படப்பிடிப்பு தொடங்கியது படப்பிடிப்பில் சூர்யாவின் மிரட்டலான தோற்றம் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. இந்நிலையில் திடீரென கதையில் மாற்றம் செய்யபட்டதால் நடிகர் சூர்யாவிற்கு இந்த கதை உகந்தது அல்ல. அதனால் இந்த படம் சூரியாவை வைத்து இயக்க போவது இல்லை. மீண்டும் ஒரு நல்ல கதையில் நானும் சூர்யாவும் இணைவோம் என்று அதிர்ச்சி கொடுத்தார் இயக்குனர் பாலா.

பின் தற்போது பாலா மீண்டும் வணங்கான் படத்தை கையிலெடுத்து அதில் கதாநாயகனாக அருண் விஜய் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நிறைய தடைகளை தாண்டி தற்போது இயக்குனர் பாலா வணங்கான் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். முன்னதாக சூர்யா வணங்கான் படத்தில் மிரட்டலான தோற்றத்தில் இருந்தது போலவே அருண் விஜய் இந்த படத்தில் அதே கெட்டப்பில் வரும் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பகுதிகளில் படத்தின் முதல் பிரிவு 25 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயம் இந்த படம் அருண் விஜய் மற்றும் இயக்குனர் பாலா விற்கு ஒரு தரமான கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘யானை’ படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படம் சூர்யா வை வைத்து ஹரி இயக்கவிருந்த அருவா படத்தின் என்ற கதை என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யா கதையில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.