தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையிலான தரமான படங்களை தொடர்ந்து வழங்கி வரும் நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, தமிழ்த் திரையுலகில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின வெற்றியைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் - 2 வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் 28 வது திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் அகிலன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் N.கல்யாண கிருஷ்ணன் உடன் மீண்டும் இணைந்துள்ள ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள அகிலன் திரைப்படம் இன்று மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜிராக் ஜானி, ஹரிஷ் பெரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் அகிலன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். துறைமுகம் மற்றும் அதை சுற்றி நடைபெறும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அகிலன் திரைப்படம் தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தொடர்ந்து இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, இயக்குனர் I.அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது தனது ட்விட்டரில் #AskJR என்ற ஹேர் ஸ்டைல் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து ஜெயம் ரவி பதிலளித்து வந்தார். அந்த வகையில் அகிலன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவின்போது இயக்குனர் மோகன் ராஜா அறிவித்த தனி ஒருவன் திரைப்படம் எப்போது தொடங்கும் என கேட்டபோது 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என நடிகர் ஜெயம் ரவி பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்த நடிகர் ஜெயம் ரவியிடம் ரசிகர் ஒருவர் எப்போது நீங்கள் இயக்குனராக திரைப்படத்தை இயக்கப் போகிறீர்கள்? என கேட்க, அதற்கு “என்னுடைய 50வது வயதிற்குள் சகோதரரே” என நடிகர் ஜெயம் ரவி பதில் அளித்துள்ளார். இதுவரை நடிகராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கும் இந்தத் திட்டம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையிலான படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி இயக்கும் திரைப்படம் எப்படி இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
Before I turn 50 brother https://t.co/5aSaZSIAbl
— Jayam Ravi (@actor_jayamravi) March 9, 2023