இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வைகைப்புயல் வடிவேலு உள்ளிட்டோர் இணைந்து நடித்து வெளிவர இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை நடிகர் தனுஷ் வழங்கி இருக்கிறார். தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் கவனிக்க வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படத்தில் நடிகர் தனுஷ் உடன் கைக்கோர்த்தார். கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதைத் தொடர்ந்து தனது மூன்றாவது படைப்பாக மாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலு அவர்களை எந்த ஒரு கோணத்தில் பார்த்ததே இல்லை என சொல்லும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலு அவர்களை நடிக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ட்ரெய்லரே வடிவேலுவின் கதாபாத்திரத்தின் மீதும் மாமன்னன் திரைப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அது போக தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருவதால் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். எனவே மாமன்னன் தான் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசி திரைப்படம் என்பதும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது.

நாளை ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. ஏற்கனவே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை வென்று விட்டன. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் தனுஷ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தின் தனது விமர்சனத்தை தன்னுடைய TWITTER பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். "மாரி செல்வராஜின் மாமன்னன் படம் ஒரு உணர்வு. உங்களுக்கு ஒரு பெரிய அணைப்பு(HUG) மாரி. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பணி அபாரம். குறிப்பாக இடைவேளை காட்சியில் திரையரங்குகள் எல்லாம் வெடிக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அற்புதம்!" என தனது விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ் மாமன்னன் திரைப்படம் குறித்து பதிவிட்ட அவரது முதல் விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் தனுஷின் அந்த விமர்சனத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.