தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. பல தசாப்தங்களாக தன்னுடைய உடல் மொழி மூலமாகவும் நகைச்சுவை டிராக் மூலமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர் வடிவேலு. நூறுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாகவும் ஐந்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்தவர் வடிவேலு. இடையில் பல ஆண்டுகளாக பெரிதாக திரைத்துறையில் நடிக்கவில்லை என்றாலும் அவரது முந்தைய படங்களின் நகைச்சுவை மீம்களாக மக்கள் மத்தியில் இருந்தது. இவர் முகம் இல்லாத மீம்களை பார்க்கவே முடியாது என்ற நிலையை தன் நகைச்சுவை மூலம் உருவாக்கியவர். எந்தவொரு காலத்திலும் வடிவேலுவின் வெற்றிடத்தை யாராலும் நிரப்பிவிட முடியாது என்று சொல்லும் அளவு தீவிர ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் வடிவேலு

தற்போது வடிவேலு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் படி சமீபத்தில் இவர் நடிப்பில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வெளியானது. மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்றும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய வடிவேலுவிற்கு அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வடிவேலுவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா தந்து 87 வயதில் இறந்துள்ளார். இந்த துயர் செய்தியையடுத்து வடிவேலு அவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் "நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வடிவலு அவர்களை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

ரசிகர்கள், வடிவேலு நகைச்சுவையை திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு வெளியே மக்களுடன் அவர் உரையாடும் பல தருணங்களை பார்த்து ரசித்துள்ளனர். இந்த உருக்கமான செய்தி வடிவேலுவிற்கு மட்டுமல்லாமல் வடிவேலு ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. இதனையடுத்து இணையத்தில் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.