உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அமீரகத்துக்கு, உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதையொட்டி ஐ.நா. அகதிகள் பிரிவின் கமிஷனர் பிலிப்போ கிராண்டி நேற்று கூறும்போது, ‘‘7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி உள்ளதை நாங்கள் கண்டிருக்கிறோம்’’ என குறிப்பிட்டார்.

மேலும் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் பேர் அகதிகளாக அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அமீரகத்துக்கு, உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகத்தின் தூதரக ஆலோசனை பிரிவின் உதவி செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது: கடந்த புதன்கிழமை இரவு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகம் உக்ரைன் மக்கள் வருகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி அங்கு வசிக்கும் உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்துக்கு வருகை புரிய விசா தேவையில்லை. நேரடியாக பாஸ்போர்ட்டுடன் வருகை புரிந்து விமான நிலையங்களில் வருகைக்கான விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

அதனைத்தொடர்ந்து இதற்காக அமீரகத்தில் உள்ள உக்ரைன் நாட்டு தூதரகத்தின் ஒத்துழைப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை மற்றும் சேவைகளை வழங்கவும் அமீரகம் தயாராக உள்ளது. உக்ரைன் நாட்டுக்கு ஏற்கனவே அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவின் மனிதாபிமான உடனடி நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உக்ரைனுக்கான பிரதேச அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்காகவும் இந்த பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதேபோல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உக்ரைனில் உள்ள மனிதாபிமான நிலை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கூறப்பட்டதுபோல் பாகுபாடு மற்றும் தடைகள் இல்லாமல் நாட்டை விட்டு அங்கு வசிப்பவர்கள் வெளியேற பாதுகாப்பாக அனுமதிக்க வேண்டும் என்பதை அமீரகம் வலியுறுத்தி வருகிறது.