கணவர் இருக்கும்போது உன்னுடன் எப்படி வாழ முடியும்? என்று மனைவி கூறிய நிலையில், கள்ளக் காதல் விவகாரம் கொலையில் முடிந்துள்ளது.

விருதுநகர் ஆணைக்குழாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மணிகண்டன், மதுரை கப்பலூரைச் சேர்ந்த 21 வயதான ஜோதிலட்சுமியை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், கணவன் - மனைவி இருவரும் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமியின் தந்தை ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், அவரை உடன் இருந்து பார்த்துக்கொள்வதற்காக, தனது குழந்தையுடன், அம்மா வீட்டிற்குச் சென்ற ஜோதிலட்சுமி, தனது தந்தையை கவனித்துக்கொண்டார்.

அப்போது, ஜோதிலட்சுமியின் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, அவரது தூரத்து உறவினரான கப்பலூரைச் சேர்ந்த 24 வயதான கார்த்திக் என்ற இளைஞரும், அங்கு இருந்துள்ளார்.

அப்போது, கார்த்திக் - ஜோதிலட்சுமி இருவரும் நட்பாக அறிமுகமான நிலையில், நாளடைவில் அதுவே, அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், ஜோதிலட்சுமியின் தந்தையின் உடல் நிலை சீரான பிறகு, தனது கணவருடன் ஜோதிலட்சுமி வந்துவிட்டார். ஆனால், கார்த்திக் உடன் ஜோதிலட்சுமி தொடர்ந்து மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளார்.

இந்த விசயம், ஜோதிலட்சுமியின் கணவர் மணிகண்டனுக்கு தெரிந்த நிலையில், இது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால், கணவனிடம் சண்டை போட்டுவிட்டு தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஜோதிலட்சுமி, அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த கார்த்திக், “நீ என்னுடன் வந்துவிடு, நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளான்.

ஆனால், “கணவர் இருக்கும்போது உன்னுடன் எப்படி வாழ முடியும்?” என்று ஜோதிலட்சுமி அவனிடம் கூற, மணிகண்டனை கொலை செய்ய கார்த்திக் திட்டமிட்டுள்ளான்.

இதனையடுத்து, மணிகண்டன் வீட்டிற்குச் சென்ற கார்த்திக், “ஜோதிலட்சுமி அம்மா உடன் சமாதானம் பேச வேண்டும்” என்று கூறிவிட்டு, மணிகண்டனை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான்.

பின்னர், மணிகண்டனை தனது நண்பர்களுடன் சேர்ந்து, கார்த்திக் கொலை செய்துள்ளான். இந்த தகவல் ஜோதிலட்சுமியின் தயார், மணிகண்டனின் தாயாருக்கு போன் செய்து கூறிய நிலையில், இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

மேலும், மணிகண்டன் கொலையில், ஜோதிலட்சுமியின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக மணிகண்டனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.