சீமானின் தூண்டுதலால், அவரது கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக, சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலெட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சீமான், ஒருபோதும் இது தொடர்பாகப் பதில் அளித்தது இல்லை. இதை ஒரு பொருட்டாகவும் அவர் கருதியதுமில்லை.

இதனிடையே, கடந்த வாரம் சீமான் மீது பகிரங்கமான குற்றச்சாட்டைச் சுமத்தி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி, “என் கேள்விக்குப் பதில் சொல்வதைக் கூட, கேவலமாகக் கருதும் சீமான், எனக்குப் போதையில் தீராத தொல்லை கொடுத்திருக்கிறார்” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், “சீமான் பார்ப்பதற்கு நல்லவராகத் தெரிந்தாலும், அவர் குடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது என்றும், அவர் குடித்துவிட்டு, என்னைப் பலமுறை டார்ச்சர் செய்திருக்கிறார்” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

அத்துடன், “சீமான் குறித்து நான் பேசியது தொடர்பாகக் கனடாவிலிருந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்னைத் தொடர்ந்து மிரட்டினார்” என்றும் விஜயலெட்சுமி குற்றம்சாட்டினார்.

இந்த புகாருக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த நடிகை விஜயலெட்சுமி, தற்போது “சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்தி, என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், இது தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலெட்சுமியை நேரில் சந்தித்து, விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், நடிகை விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.