கணவன் மனைவி உள்பட 3 பேர் கொடூர கொலை! வடமாநில இளைஞர்கள் வெறிச்செயல்..
By Aruvi | Galatta | 12:32 PM
சேலத்தில் கணவன் மனைவி உள்பட 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் திருமலைகிரி செம்மண்திட்டைச் சேர்ந்த தங்கராஜின் வெள்ளிப் பட்டறையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந்தனாகுமாரி, இவர்களது கைக் குழந்தை மற்றும் ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி குமார் ஆகியோர், வேலை செய்து வந்தனர்.
அத்துடன், இவர்கள் அனைவரும் தங்கராஜுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். அங்கு பக்கத்து வீட்டில் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள், தங்கி வேலை செய்து வந்தனர். அவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நள்ளிரவு 11.30 மணி அளவில், ஆகாஷ் வீட்டில் அவர்களது கைக்குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, ஆகாஷ் வீட்டில் கணவன் - மனைவி உள்பட 3 பேரும், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்த வெளிமாநில இளைஞர்கள் 4 பேரும், தப்பி ஓடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து, சேலம் போலீசார், கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இன்று அதிகாலை பாலக்காடு ரயில் நிலையத்தில் வினோத், தினேஷ், சுராஜ், விஜி ஆகிய 4 வெளிமாநில இளைஞர்களையும் கேரள போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரும் தமிழக போலீசாரிடம் ஒன்று ஒப்படைக்கப்பட உள்ளனர். அதன்பிறகே, கொலைக்கான காரணங்கள் தெரியவரும்.