பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிகாரர் ஒருவரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குமாரபாளையத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த அம்மன் கோயிலில் முன் பகுதியில் வேல் கம்பிகள் இருக்கின்றன. இந்த வேல் கம்பிகளில், மதுபோதையில் வந்த நபர் ஒருவர் சாரைப்பாம்பைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி பிறகு, அந்த வேல் கம்பியில் குத்தி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர், அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம், அந்த கிராம் முழுவதும் பரவியது. இதனால், அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அங்குள்ள போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், கோயில் முன்பாக உள்ள சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, பாம்பைக் கொன்று கோயிலில் உள்ள வேலில் குத்தி விட்டு தப்பியோடியது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வேலுச்சாமியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.