தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா!
By Aruvi | Galatta | May 21, 2020, 06:27 pm
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் சற்றும் சளைக்காமல் தமிழகத்தில் தீவிரமாகவே பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகப் பாவம் பார்த்த கொரோனா வைரஸ், இன்று பாவம் பார்க்காமல் இன்று ஒரே நாளில் 776 பேரைத் தாக்கி உள்ளது.
அதன்படி, சென்னையில் எம்.எல்.ஏ கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்பு உயிரிழந்துள்ளார். சென்னை சூளையைச் சேர்ந்த கொரோனா பாதித்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை, அடுத்த சில நிமிடங்களில் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் கொரோனா தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 94 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று 400 பேர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,282 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, அரசுப் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் வரும் 31 ஆம் தேதி வரை பணிக்கு வர விலக்கு அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.