நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், அக்‌ஷய் குமார், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவது தொடர்பாக கடந்த 3 முறை தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தூக்கில் போடுவது 3 முறையும் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடுவது, கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும், மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு, தற்போது 4 வது முறையாகத் தூக்கில் ஏற்றுவதற்கான தேதி குறிக்கப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக டெல்லி திகார் சிறையில் அதற்கான ஒத்திகை நேற்றும் இன்றும் நடத்தப்பட்டது.

ஒரு பக்கம் குற்றவாளிகளைத் தூக்கில் போட ஒத்திகை நடத்தப்படும் நிலையில், இன்னொரு பக்கம், “தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி” குற்றவாளி பவன்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மற்றொரு குற்றவாளியான அக்க்ஷய் குமார் 2 வது முறையாக, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

இதனால், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைத் தூக்கில் போடுவது மீண்டும் கடைசி நேரத்தில் 4 வது முறையாகத் தடை படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால், நீதி தாமதம் ஆகிறதோ? என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.

இதனிடையே, “தாமதமாகத் தரப்படும் நீதி என்பது, அநீதிக்கு சமம்” என்ற சொல்லாடல் நம் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது.