கொரோனா பீதி.. உடலுறவில் ஈடுபடலாமா?
By Aruvi | Galatta | 05:01 PM
கொரோனா பீதியால், உடலுறவில் ஈடுபடலாமா? என்ற அச்சமும், கேள்வியும் அனைவருக்கும் எழுந்துள்ளது.
கொரோனா பீதியால், உலகம் முழுமைக்கும் கை கொடுத்து, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் மேல்நாட்டு கலாச்சார பழக்கம் மறைந்து, மனிதர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒருவரையொருவர் தொட்டுப் பேசாதீர்கள், 6 அடி தள்ளி நின்று பேசுங்கள், கை குலுக்காதீர்கள், கூட்டமாக நிற்காதீர்கள் என்று, மனிதனுக்கு மனிதன் சீன பெருஞ்சுவரையே எழுப்பி, தன்னை தானே பாதுகாத்து வருகின்றான்.
குறிப்பாக, உலகமே கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் கணவன் - மனைவி அதிக நேரம் அருகில் அருகில், நெருக்கமா இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுத்தம், உணர்வு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் மனிதனுக்கு விதித்தாலும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியுமா? இதனால், தற்போது “மனிதன் உடலுறவில் ஈடுபடலாமா?” என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இது பற்றிதான், வெளிநாட்டு ஊடகங்கள் பேசி வருகின்றன.
அதன்படி, “கொரோனா வைரஸ், உடலுறவு கொள்வதால் பரவுமா? என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை” என்றும், “பெண்கள் கருத்தரிப்பது பாதுகாப்பானதா? என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை” என்றும் பேசப்படுகிறது.
அதே நேரத்தில், “கொரோனா வைரஸ் இருமல் மற்றும் காய்ச்சல் மூலம் பரவுகிறது என்று கூறப்படுவதால், உடல் சார்ந்து தாம்பத்திய உடலுறவைக் கட்டுப்படுத்துவது அவசியம்” என்றே கூறப்படுகிறது.
“கொரோனா வைரஸ், எச்சில் மூலம் பரவும் என்றால், உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதாலும் பரவும்” என்றும் கூறப்படுகிறது.
இதனால், உடல் நலனின் அக்கரைக்கொண்டு, காதலர்கள் சந்திப்புகளைத் தள்ளி வைப்பது நல்லது என்றும், கணவன் - மனைவி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வலியுறுத்தி உள்ளன.