தமிழகத்தில் 1292 பேர் கண்காணிப்பு! இந்தியாவில் 130 பேர் பாதிப்பு! உயிரிழப்பு 3 ஆக உயர்வு..
By Aruvi | Galatta | 03:07 PM
கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் 1292 பேர் கண்காணிப்பில் உள்ள நிலையில், இந்தியாவில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக, ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிராவில் 64 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதனால், இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், தமிழ்நாடு என 15 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளனது. இந்த கொரோனா தாக்கத்திற்கு இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 131 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அதிகபட்சமாக மராட்டியத்தில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 27 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், துருக்கி ஆகிய இடங்களிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நாளை முதல், வரும் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் 1292 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.