ஈரோடு அருகே காதல் திருமணம் செய்து வைத்த நபரை, 50 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன், அந்த பகுதியில் உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி என்ற பெண்ணும், கடந்த சில வருடங்களா காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால், காதலர்கள் இருவருக்கும், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்குப் பின், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள காவலாண்டியூரில் உள்ள ஈஸ்வரன் வீட்டில், செல்வன் - இளமதி தம்பதியினர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் வெளியே சென்றிருந்தபோது, இரவு நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 50 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து ஈஸ்வரனை கடுமையாகத் தாக்கிவிட்டு, அவரை கடத்திச் சென்றனர்.

இதனையடுத்து, அங்குள்ள உக்கம் பருத்திக்காடு பகுதியில் செல்வன் - இளமதி தம்பதியையும், தனித்தனியே இரு வேறு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் கடத்தப்பட்ட ஈஸ்வரன் மற்றும் செல்வனை, அங்குள்ள கருங்கல்லூர் பகுதியில் மீட்டுள்ளனர்.

மேலும், ஈஸ்வரன் மற்றும் செல்வனை கடத்தியதாகச் சிலரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், இளம்பதியை போலீசாரால் மீட்க முடியவில்லை. அவர், எங்கு இருக்கிறார் என்ற விவரமும் போலீசாருக்கு தெரியவில்லை. இதனால், அவரை மீட்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடத்தப்பட்ட இளமதியை மீட்கக்கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர், கொளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சமாதானம் பேசி, இளம்பதியை விரைவில் மீட்பதாக உறுதி அளித்தனர். பின்னர், போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனிடையே, சினிமா பாணியில் காதல் திருமணம் செய்துகொண்டவர்களும், காதல் திருமணம் செய்து வைத்தவரும் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.