காதலியை நண்பனுக்குத் தாரைவார்க்க நினைத்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இவர்களுக்குள் காதல் நெருக்கமான நிலையில், இவர்கள் இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்ததாகவும், அப்போது தினேஷ் காதலியை ஆபாசமாகத் தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தினேஷ் உடனான காதலை, அந்த மாணவி துண்டித்துள்ளார்.

இதனால், கோபமடைந்த தினேஷ், மாணவியை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளார். அத்துடன், தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படம் குறித்தும் மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து, தன் காதலியின் ஆபாச படத்தை, தன் சக நண்பன் ரவிக்கு அனுப்பி வைத்து, காதலியின் செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளான்.

மாணவியின் ஆபாச படத்தைப் பார்த்த ரவி, மாணவியிடம் தவறான எண்ணத்துடன் ஆபாசமாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் எல்லாவற்றையும் கூறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷை கைது செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள ரவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கல்லூரி மாணவிக்குக் காதல் ஆசை காட்டி, காதல் வலையில் வீழ்த்திய காதலன், காதலியை தன் நண்பனுக்கு தாரைவார்க்க நினைத்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.