ஒருதலை காதலால் காதலியை கடத்திய காதலனின் நண்பர்களை, சிவகார்த்திகேயன் படத்தில் வரும் காட்சியைப் போல், பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த “மனம் கொத்திப்பறவை” படத்தில் வருவது போலவே, ஒருதலையாக நாயகியைக் காதலிக்கும் நாயகன், தனது நண்பர்களிடம் இருவரும் உருகி உருகி காதலிப்பதாக ரீல் விடுவார். இதனால், நாயகன் சொன்னது உண்மை என்று நம்பி, நாயகியைக் கடத்திய நாயகனின் நண்பர்களை பெண்ணின் உறவினர்கள் வச்சி வச்சி தர்ம அடி கொடுப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் தூசூரை சேர்ந்தவர் பிரியா, நாமக்கல்லில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவர், சேலம் அம்மாபேட்டையில் வசிப்பதால், அவரை பார்க்க வாரம் ஒருமுறை பிரியா சென்று வருவது வழக்கம்.

அப்படிச் சென்று வரும்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பூவராகவன், தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் 2 முறை வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண், அந்த காதலை ஏற்க மறுத்துள்ளார்.

ஆனால், அந்த பெண் தன்னை உருகி உருகி காதலிப்பதாக, தன் சக நண்பர்களிடம் பூவராகவன் ரீல் விட்டுள்ளார். ஒரு கட்டத்தில், “தன் காதலிக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், நான் கிடைக்கவில்லை என்றால், அந்த பெண் இறந்துவிடுவாள்” என்றும், தன் சக நண்பர்களிடம் பூவராகவன் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பூவராகவனின் சக நண்பர்கள், அந்த பெண்ணை கடத்தி, பூவராகவனுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர்.

அதன்படி, பிரியா நேற்று வழக்கம்போல் துணி கடைக்கு வந்தபோது, பூவராகவன் உடன் ஆட்டோ ஓட்டும் குமார் என்பவர், கடைக்குள் புகுந்து, பிரியா கையைப் பிடித்து இழுத்து வந்து ஆட்டோவில் ஏற்றிக் கடத்த முயன்றுள்ளார்.

அப்போது, காதலன் பூவராகவன் ஆட்டோவில் ஏற தாமதம் ஆனதால், தன்னை யாரோ கடத்துவதாக பிரியா கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், அந்த வழியாகச் சென்றவர்கள் ஆட்டோவை சூழ்ந்துள்ளனர்.

இதனால், பிரியாவை கடத்த வந்த பூவராகவனின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால், பிரியாவை கடையிலிருந்து அழைத்து வந்த குமார் மட்டும், பொதுமக்கள் கையில் வசமாக மாட்டி உள்ளார்.

இதனால், அவரை ஊர் மக்கள் வச்சி செய்துள்ளனர். பின்னர், பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் தெரிந்த நிலையில், அவர்களும் புடை சூழ திரண்டு வந்து, குமாரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி அடித்துள்ளனர்.

இதனையடுத்து, குமாரை அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், குமாருக்கு பலமாக அடிப்பட்டு இருந்ததால், அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் மட்டுமே வழக்கை வாங்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், குமாரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இளம் பெண்ணின் எதிர்காலம் கருதி, பெண்ணை கடத்தியவர்கள் மீது புகார் வேண்டாம் என்று, பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனால், ஒருதலை காதலன் பூவராகவன் மற்றும் அவனது நண்பர்கள் வழக்கிலிருந்து தப்பி உள்ளனர்.

ஊரு விட்டு ஊரு வந்து காதல் பண்ணி, அது சொதப்பினால் என்ன நடக்கும் என்பதற்கு, இந்த சபம்வமே உதாரணம்.