வீட்டு வேலைப் பணியாளர்கள், வேலைக்குச் செல்ல அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 40 நாள் பொது முடக்கம் அமலிலிருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு இந்த பொதுமடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் 17 ஆம் தேதி வரை 54 நாட்களுக்குத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருக்கம் என்று மத்திய - மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிவிப்பையும் மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.

எனினும், வீட்டு வேலைப் பணியாளர்கள், வேலைக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாநிலப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவினை 04.05.2020 முதல் 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்ததன் அடிப்படையில், 03.05.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றுப் பணி புரிய அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுநலன் கருதி, வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக” தமிழக அரசு கூறியுள்ளது.

இதனால், “வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் 17.05.2020 நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை, தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாகவும்” தமிழக அரசு தெரிவித்துள்ளது.