இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது!
By Aruvi | Galatta | May 04, 2020, 12:05 pm
இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கி உள்ளது.
கொரோனாவின் கோர தாண்டவம், ஒரு பக்கம் மிகப் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் அக்னி நட்சத்திரம் என்னும் உக்ர வெயில் தாக்கம், இன்றுமுதல் தொடங்கி உள்ளது.
இந்த காலகட்டத்தில், வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுவது வழக்கம். வெயில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக கடுமையான உக்கிரத்தைக் காட்டும்.
இதனிடையே, இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டு வந்தது. அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. இதனால், அந்த பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். இனி, வெயில் அளவு 100 டிகிரியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில், இன்று முதல் தொடங்கி உள்ளது.
அதன்படி, இன்று காலை 8.57 மணிக்கு அக்னி நட்சத்திரம் தொடங்கித் தொடர்ந்து 24 நாட்கள் இருக்கிறது. அதாவது, வருகிற 28 ஆம் தேதி பகல் 1.51 மணியோடு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையான அளவில் அதிகரித்துக் காணப்படும்.
மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரியில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விட்டால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மட்டுமே வெயிலின் உக்கிரத்தை உணர முடியும்.
இதனிடையே, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும், குடை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.