பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வந்த பலருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Chennai Koyambedu Market close from today

மேலும், கோயம்பேடு வந்து பூ, காய்கறி, பழங்கள் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அத்துடன், கோயம்பேடு சந்தையுடன் தொடர்பிலிருந்து கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு திரும்பிச் சென்ற 100 க் கணக்கானவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், கோயம்பேடு வியாபரிகள் மற்றும் கோயம்பேடு வந்து சென்ற பொதுமக்கள் அனைவரும் கடும் பீதியடைந்தனர்.

இந்நிலையில், அது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Koyambedu Market close from today

மேலும், “பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற 7.5.2020 வியாழக் கிழமை முதல், தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

“பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றும், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.