நித்தியானந்தாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இந்திய தூதரகத்தின் உதவியுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமத்தில், தனது 4 மகள்களை அடைத்து வைத்து, பார்க்க அனுமதி மறுப்பதாகப் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 மகள்களை மீட்டனர். ஆனால், மற்ற 2 மகள்களும் அங்கு இல்லை. இதனால், அவர்களை மீட்டுத் தரக்கோரி, ஜனார்த்தன சர்மா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாகப் பெண்களைக் கடத்தி கொடுமைப்படுத்தியதாக நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் பொறுப்பாளர்களா இருந்த பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோரை போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதனையடுத்து, ஜனார்த்தன சர்மாவின் மகள்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தகோரி அகமதாபாத் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “எங்கள் தந்தை ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் இருக்கிறோம். இங்குள்ள, சரியான முகவரி தெரியவில்லை” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர்நீதிமன்றம், நித்தியானந்தா கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்கள், எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குஜராத் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், நித்தியானந்தா இருக்கும் இடம் விரைவில் தெரியவந்துவிடும் என்றும், அவர் விரைவில் கைதாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.