பொள்ளாச்சி அருகே குளத்தை பார்வையிடச் சென்ற முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச முயற்சி நடத்தப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுக்கா கோதவாடி பஞ்சாயத்தில்
சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளம் மற்றும் வரத்துக் கால்வாய் 2017-2018-ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கிராம மக்களின் பங்களிப்புடன் தூர் வாரப்பட்டன.

இந்த குளம் நேற்று நிரம்பியதை அடுத்து வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக குளத்தின் கரையில் உள்ள அம்மன் கோயிலில் 101 பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் நிகழ்ச்சியில் முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

இன்று காலை 11 மணிக்கு கோதவாடி கிராமத்திற்கு சென்ற அவரையும், கிராம மக்களையும் அப்பகுதி திமுக ஒன்றியச் செயலாளர் பொங்கல் வைக்க கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டலுக்கு பயப்படாத அக்கிராம மக்கள் வருண பகவானுக்கும், குளத்துக்கரை அம்மனுக்கும் பொங்கல் வைத்து கொண்டாடி வந்தனர்.

இதையடுத்து தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மற்றும் 40 அடியாட்களுடன் வந்து பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் அங்கிருந்த பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இச்செயலை அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததோடு, அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல் மற்றும் சேர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் பட்டப் பகலில் காவல் துறையினரின் முன்னிலையிலேயே தி.மு.க. குண்டர்களால் தாக்கப்படுகிறார் என்றால், சாதாரண சாமான்ய மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து திமுக வினரால் சாமான்ய மக்கள், அதிகாரிகள் தொடர்ந்து தாக்குதலுக்குட்பட்டு வருகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் வக்கிரங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே பல இடங்களில் ஆளும் தி.மு.க.வினரால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். அதேநேரத்தில் தி.மு.க.-வினருக்கு ஏவல் செய்யும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.

அவர்களை முன்வைத்து தமிழகமெங்கும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சட்டமன்ற உறுப்பினரே அவரது தொகுதியிலேயே தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்.

இந்த ஆளும் கட்சியினரின் வன்முறையை கடுமையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சட்ட விரோத செயல்களைத் தடுத்து நிறுத்த, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அ.தி.மு.க. முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

தவறு செய்த தி.மு.க.-வினர் மீதும் இதை வேடிக்கைப் பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு தமது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.