“தர்பார்” திரைப்பட பாணியில் போலீசார் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் தான், சப்இன்ஸ்பெக்டர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாகக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சப்இன்ஸ்பெக்டர் வில்சன் இறந்த ஈரம் காய்வதற்குள், அதே மாவட்டத்தில், மீண்டும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் நேற்று இரவு, ரெஜி மற்றும் ஐயப்பதாஸ் ஆகிய போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், 2 போலீசார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அருண், சுனில்குமார், ரமேஷ், தினேஷ், அஜித் ஆகியோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து போலீசார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.