சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலை விபத்தில் சிக்கி 318 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புதிதாகப் பிறந்த 2020 ஆம் ஆண்டின் முதல் நாளை வரவேற்கும் விதமாக, புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று சென்னையில் கலை கட்டியது. இதற்காக, பலரும் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மெரினா உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கு வருகை தந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், சென்னையின் முக்கியமான 60 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே சில இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பைக் சாகச நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர். குறிப்பாக, பலர் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றனர்.

இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடந்தன. அதன்படி,
புத்தாண்டு தினத்தில் மட்டும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுமார் 318 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 150 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 63 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 57 பேரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 48 பேரும், சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், படுகாயம் அடைந்தவர்கள் உள்நோயாளிககளா சிகிச்சை பெற்று வரும் நிலையில், லேசான காயம் அடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

அதேபோல், தரமணி ஆய்வாளர் புஷ்பராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவர் விபத்தில் சிக்கினார். அதேபோல், பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய எழும்பூர் ஆய்வாளர் ஜெயசித்ராவும் விபத்தில் சிக்கினார். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, 304 பேர் மட்டுமே விபத்தில் சிக்கி, சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 318 பேர் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.