கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், `கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில்' என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.

``மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் வரை தண்டனை இருக்காது என்று உறுதி தருகிறேன். நீங்கள் எங்களிடம் சரியாக, நியாயமாக நடந்துகொள்ளாவிட்டாலும் நாங்கள் உங்களிடம் நியாயமாகவே நடந்துகொள்வோம்" என்று குறிப்பிட்டார் நீதிபதி அருண் மிஸ்ரா.

"நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் என் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதற்காக நான் வேதனைப் படுகிறேன். இந்த வேதனை எனக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதற்காக அல்ல. நான் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளேன் என்பதற்காக.

ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்று கருதுகிறேன். என்னுடைய ட்விட்டர் பதிவுகள் என்னுடைய கடமையை நிறைவேற்றும் முயற்சிகளே. அமைப்பு மேம்படுவதற்காகப் பணியாற்றும் முயற்சி என்றே என்னுடைய ட்வீட்டுகள் பார்க்கப்படவேண்டும்" என்று வாதிட்டார் பிரசாந்த் பூஷன்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், "நீதித்துறையில் ஊழல் நடந்தால் அதை எப்படி அம்பலப்படுத்துவது?" என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து பிரசாந்த் பூஷன், ``நான் கருணை காட்டும்படி கேட்கவில்லை. பெருந்தன்மை காட்டும்படி கேட்கவில்லை. தண்டனை எதுவாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்" என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்தது. மேலும், பிரசாந்த் பூஷனின் கருத்து குறித்து பரிசீலிக்க 3 நாட்கள் அவகாசத்தையும் நீதிபதிகள் வழங்கினர். இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரசாந்த் பூஷன், தனது கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்றார்.

மேலும் இதற்கு தான் மன்னிப்பு கேட்டால், தனது மனசாட்சியையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் ``இந்த முறை அவருக்கு எச்சரிக்கை கொடுத்து விடுவித்துவிடலாம்' என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதம் வைத்துள்ளார்.

“இந்த முறை அவரை எச்சரிக்கையோடு விட்டுவிடலாம். இனி இதைப் போல் கருத்து சொல்ல வேண்டாம் என்று மட்டும் அவரிடம் சொல்லலாம்” என்று உச்ச நீதிமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் வாதாடினார்.

அவர் மேலும், பல முன்னாள் மற்றும் இன்னாள் நீதிபதிகள், நீதிமன்ற அமைப்பு மீது ஊழல் புகார்கள் சுமத்தியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“நீதிமன்ற அமைப்பு மீது தெளிவற்று இருக்கும் விஷயங்கள் மீது சொல்லப்பட்ட கருத்தாகத்தான் பூஷனின் கருத்தைப் பார்க்க வேண்டும். அதன் மூலம் சீர்திருத்துங்கள் செய்ய வேண்டும்” என்று வாதத்தின் போது கூறினார் வேணுகோபால்.