சென்னையில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை!

சென்னையில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை! - Daily news

சென்னையில் நேற்று போல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே மீண்டும் மழை பெய்து வருகிறது. 

chennai rainsசென்னையில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் நேற்று  காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை மாநகர் புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர்.  குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து கன மழை கொட்டியதால் பல இடங்களில் மழைநீர் கொட்டியது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக் கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய 1,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மேற்கு மாம்பலம், கோயம்பேடு, பள்ளிக்கரணை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம். தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.

Leave a Comment