விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றிய தமன்... தரமான செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றிய தமன்,thaman helps vijay tv super singer junior kids for their future | Galatta

ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. தமிழ் சின்னத்திரையுலகில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  ஒளிபரப்பாகும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், இசையில் சிறந்து விளங்கும்  சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் மக்களுக்கு ஆல்டைம் ஃபேவரட். அட்டகாசமான இசை நிகழ்ச்சியான இந்த சூப்பர் சிங்கரில் இருந்து தமிழ் திரை உலகுக்கு எண்ணற்ற பின்னணி பாடகர்கள் கிடைத்திருக்கின்றனர். சூப்பர் சிங்கரில் பாடினால் கட்டாயம் சினிமாவில் பாடுவதற்கும் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என சொல்லும் அளவிற்கு பலரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டு ரசிகர்களின் பேராதரவோடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரு  நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் முதலாவதாக ஆரம்பம் முதலே அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்துள்ளார்  இசையமைப்பாளர் தமன். இந்த சிசனில் நீலகிரியைச் சேர்ந்த புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அழகான குரலால், அனைவரையும் அசர வைத்தார். கண் பார்வையில்லையென்றாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீ உடைய கதையை கேட்டு வெகு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார்.

அடுத்ததாக கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். இதே சீசனில் தனக்கென தனி ஸ்டைலில் கானா பாடல்களை பாடி அசத்தும் சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை,  கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசிர்வாதத்தை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் தமன் உறுதியளித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வாய்ப்பை வழங்கும், இசையமைப்பாளார்  தமனின் இந்த தரமான செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.