தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் ஜோடியான புஷ்கர்-காயத்ரி ஆர்யாவின் ஓரம் போ திரைப்படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகினர். தொடர்ந்து வ-குவாட்டர் கட்டிங் படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் அடுத்து வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் இந்திய திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றது. மேலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இதனையடுத்து வெப்சீரிஸிலும் தயாரிப்பாளர்களாக களமிறங்கியிருக்கும் புஷ்கர்-காயத்ரி எழுதி தயாரித்த சுழல் வெப்சீரிஸ் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரித்துள்ள வதந்தி - The Fable of velonie எனும் வெப் சீரிஸை கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். 

காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள SJ.சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வதந்தி வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வருகிற டிசம்பர் 2-ம் தேதி முதல் வதந்தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்நிலையில் வதந்தி வெப் சீரிஸ் குழுவினரோடு நமது கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் விக்ரம் வேதா படம் மற்றும் வதந்தி வெப் சீரிஸ் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், “விக்ரம் வேதா திரைப்படத்தை முதலில் வெப் சீரியஸாக எடுக்கவே திட்டமிட்டிருந்ததாகவும் அதுவும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் பயணத்தில் கதையின் போக்கு செல்வது போல வெவ்வேறு பாதைகளில் எபிசோடுகளாக பிரிக்கப்பட்டு ரசிகர்கள் எந்த பாதையில் பார்க்க விரும்புகிறார்களோ அதை தேர்ந்தெடுத்து பார்க்கும் படியான ஐடியாவில் திட்டமிடப்பட்டதாகவும்” குறிப்பிட்டுள்ளனர். இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி, இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் மற்றும் நடிகர் SJ.சூர்யா ஆகியோர் கலந்து கொண்ட அந்த சிறப்பு பேட்டி இதோ…