ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். 

ரவிவர்மன் ஒளிப்பதிவு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து வெளிவந்த பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் தெலுங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தனது ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.