தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழும் SA.சந்திரசேகர் அவர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியும் பல திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களிலும் நடித்தவர். குறிப்பாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், நீதி பிழைத்தது, சாட்சி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், நீதியின் மறுபக்கம், எனக்கு நானே நீதிபதி, வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, ராஜநடை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தை இயக்கிய SA.சந்திரசேகர் அவர்கள் தனது மகனான தற்போதைய இந்திய சினிமாவின் “தளபதி விஜய்” அவர்களை தனது நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தளபதி விஜய்யின் திரைப்படத்தின் ஆரம்ப கட்டத்தில் வெளிவந்த மிக முக்கிய படங்களான செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக இந்த 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் இல்லை படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெள்ளித்திரையில் இருந்து முதல்முறையாக சின்னத்திரைக்கு சூப்பரான என்ட்ரி கொடுக்கிறார் SA.சந்திரசேகர். அந்த வகையில் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியின் புத்தம் புது மெகா தொடரான “கிழக்கு வாசல்” என்ற மெகா தொடரில் SA.சந்திரசேகர் அவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த புதிய கிழக்கு வாசல் மெகா தொடர் ஒளிபரப்பாகும் நேரம், நடிகர் நடிகைகள் மற்றும் கதைக்களம் குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
ஸ்டார் விஜய், ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் துவங்குகிறது. இது ஒரு கண்கவர் குடும்ப கதை. இந்த நிகழ்ச்சி 07 ஆகஸ்ட் 2023 அன்று ஸ்டார் விஜய்யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.
கிழக்கு வாசல் கதை:
இந்தக்கதை சாமியப்பன் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. சாமியப்பனின் வளர்ப்பு மகள் ரேணுகா. ரேணுகா ஒரு அன்பான சுறுசுறுப்பான பெண், அப்பா, அம்மா, இரண்டு சகோதரர்கள் மற்றும் பெரிய குடும்பம் கொண்ட தனது முழு குடும்பத்தையும் அன்பாகவும் அரவணைப்பாகவும் வைப்பதில் கவனமாக இருப்பாள். குடும்பத்தில் சவால்கள் மற்றும் பிரிவினைகள் ஏற்பட்டாலும் தன்னால் முடிந்த அளவு ஒற்றுமையாக இருக்க பாடுபடுவாள். ரேணுகா தனது சொந்த குடும்பஉறுப்பினர்களிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், தான் ஒரு வழக்கறிஞராக பட்டப்படிப்பை படிக்க ஆசைப்படுகிறாரள் . இதன் மூலம் அவளுக்குத் துணையாக நிற்கிறார் அவளது தந்தை சாமியப்பன். அர்ஜுன் மற்றும் சண்முகம் இரண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், அவர்கள் அவளிடம் அன்பையும் பாசத்தையும் கொண்டுள்ளனர். கதை பல சுவையான திருப்பங்களைக் கொண்டுள்ளது மற்றும் பார்வையாளர்களை ஒவ்வொரு நாளும் இதன் கதையில் ஒன்றிவிடுவார் என்றால் மிகையாகாது.
ரேணுகாவாக ரேஷ்மா, சாமியப்பனாக எஸ்.ஏ.சந்திரசேகர், சண்முகமாக வெங்கட் ரங்கநாதன், பார்வதியாக அஷ்வினி, தயாளனாக ஆனந்த் பாபு, அர்ஜூனாக தினேஷ் கோபாலசாமி, நடேசனாக அருண், மாயாவாக ரோஜாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…