நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகை தமன்னா, நடிகர் சூர்யா, விஷால் உள்ளிட்ட பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தனர்.

இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆஷிஷ் வித்யார்த்தி தமிழில் பாபா, ஏழுமலை, பகவதி, தமிழன், ஈ, ஆறு உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம். 

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை ஆஷிஷ் வித்யார்த்தி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இது நான் விரும்பாத ஒன்று. நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். நலமாக உள்ளேன் என்றும் பேசியுள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதே போல நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் தரப்பிலிருந்து இது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashish Vidyarthi Avid Miner (@ashishvidyarthi1)