“சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” என்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவை படு பயங்கரமாக நக்கலடித்து உள்ளார். 

சின்ன குழந்தைகள் தான், பள்ளியில் படிக்கும் காலங்களில், “சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, ஜாலியாக  விளையாடிக்கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த பள்ளிப் பருவ காமெடியை, அந்த நக்கல் நையாண்டியைத் துளியும் மறக்காமல், சம கால அரசியலுக்கும் அந்த வனத்தை பயன்படுத்தி, எதிர் கட்சியை நக்கலடிக்கும் விதமாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழககத்தில் தற்போது தேர்தல் அனல் பறந்துகொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் வெயிலின் தாக்கம், மறு பக்கம் கொரோனா வைரஸின் தொற்று பரவல் என்று அலை வீசிக்கொண்டு இருந்தாலும், இவற்றுக்கு நடுவே, அரசியல் பிரச்சாரங்களும் சற்று கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். 

அதன் படி, நேற்றைய தினம் தனது தொண்டர்கள் புடை சூள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தனது 

வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, திறந்த வாகனத்தில் நின்று பேசிய அவர், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, “திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை குறித்து. நக்கலாகவும், விமர்சனம் செய்தும் பேசினார். 

அதன் படீ, “திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை, 'சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' என்ற அளவில் தான் இருக்கிறது” என்று படு பயங்கரமாக விமர்சனம் செய்தார்.

அத்துடன், “கடந்த 2006 ஆம் ஆண்டு கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்” என்று குறிப்பிட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, “ஆனால் இது வரை யாருக்கும் ஒரு சென்ட் இடம் கூட கொடுக்கவில்லை” என்றும், விமர்சனம் செய்தார்.

மேலும், “ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம் என்றும், உழைத்துப் பிழைக்கும் கூட்டம் அதிமுக கூட்டம்” என்றும், வசைபாடினார். 

“தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி 3 வது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வெற்றிபெறச் செய்வீர்” என்றும், அவர் சூளுரைத்தார். 

“கடந்த 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்த எனது அனுபவத்தை வைத்து இந்தத் தொகுதியில் நான் இன்னும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருவேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றும், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கேட்டுக்கொண்டார். 

இதனிடையே, அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் “சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா” என்ற வசனம், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.