STR வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். 

சமீபத்தில் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார். 

சில நாட்கள் முன்பு லைவ்வில் தோன்றிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது. ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் மாநாடு திரைப்படம் நிறுத்தம் என நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோபமடைந்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், இனிமேல் இதுபோன்ற செய்திகள் வெளியானால் அவ்வளவு தான். மீடியா மற்றும் அதன் சார்ந்து இருக்கும் குழுவை எப்போதும் மதிக்கின்றவன் நான். படம் நிறுத்தம் என்று எந்த ஒரு ஸ்டேட்மென்ட்டும் நான் தரவில்லை. அப்படியிருக்க படக்குழுவினரை கேட்காமல், விசாரிக்காமல் நீங்கள் எப்படி இந்த மாதிரி செய்தியை வெளியிடலாம் ? மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. உங்களது டேபிள் ஒர்க்கை நிறுத்துங்கள் என பதிவு செய்துள்ளார். 

மாநாடு படத்தின் அறிவிப்பு துவங்கியதிலிருந்தே, சுரேஷ் காமாட்சி இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் என்ன செய்வார் ? என ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.