பாலிவுட் படத்தை விட த்ரில்லாக பாலிவுட் பிரபலங்களின் விவகாரம் நிஜ வாழ்க்கையில் நடந்து வருகிறது. நடிகை ரியா சக்கரவர்த்தி கைதான விவகாரம், சுஷாந்த் சிங் மரணம் உள்ளிட்டவற்றை படமாக எடுக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருவது இன்னும் வேடிக்கை அதிகரித்து வருகிறது. பாலிவுட்டின் கனவுக் கன்னிகளாக கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக என்சிபி விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். தொடர்ந்து பாலிவுட்டில் இருக்கும் பெரும் புள்ளிகளின் பெயர் அடிபட்டுக்கொண்டே வருகிறது. 

பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக நடிகை பாயல் கோஷ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த அனுராக் கஷ்யப்போ, இது பொய் புகார் என்று தெரிவித்தார். டாப்ஸி, ஹூமா குரேஷி, கல்கி கொச்லின் உள்ளிட்ட நடிகைகள் அனுராக் கஷ்யப் அப்படிப்பட்டவர் இல்லை என்று குரல் கொடுத்தார்கள். இதையடுத்து பாயல் கோஷ் மும்பை காவல் நிலையத்தில் அனுராக் கஷ்யப் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.

அனுராக் கஷ்யப் மீது புகார் தெரிவித்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். அவர் அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அனுராக் கஷ்யப்புக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முன்னதாக அனுராக் கஷ்யப் பற்றி பாயல் கோஷ் கூறியதாவது, இந்த சம்பம் 2014-2015ம் ஆண்டில் நடந்தது. அப்பொழுது அவர் பாம்பே வெல்வெட் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். நான் பாலிவுட்டில் என் கெரியரை துவங்கி விவேக் அக்னிஹோத்ரியின் ஃப்ரீடம் படத்தில் நடித்து வந்தேன். நான் பட வாய்ப்பு தொடர்பாக இயக்குநர்களை சந்தித்து பேசி வந்தேன்.

முதல் முறை அனுராகை அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் வீட்டில் சந்தித்தேன். மூன்றாவது முறையும் அவர் வீட்டில் தான் சந்தித்தேன். அப்பொழுது அவர் மது அருந்திக் கொண்டிருந்ததுடன், புகைப்பிடித்தார். அது சிகரெட் இல்லை, ஏதோ கெட்ட வாடை வந்தது. அவர் என்னிடம் பேசிக் கொண்டே அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த அறையில் புத்தகங்கள், பழைய வீடியோ கேசட்டுகள் இருந்தன. என்னை அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்து வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு கொள்ள முயன்றார். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். அவரோ பல நடிகைகள் தன்னுடன் சகஜமாக இருப்பதாகவும், 200 பெண்களுடன் உறவு கொண்டதாகவும் பெருமையாக தெரிவித்தார். நான் கெஞ்சியதை பார்த்த அவர் அடுத்த முறை வரும்போது மனதளவில் தயாராகிவிட்டு வருமாறு கூறினார். நானும் சரி என்று கூறி அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன் பிறகு நான் அவரை சந்தித்ததே இல்லை என்றார்.