திருமணத்திற்குப் பிறகு காதலனுடன் ஓட்டம் பிடித்த 19 வயது மகளை, தந்தையே தேடிச் சென்று கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இந்த கவுரவக் கொலை அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சங்கர் லால் என்பவர், தனது மனைவி மற்றும் தன்னுடைய 19 வயது மகள் பிங்கி சைனி உடன் வசித்து வந்தார்.

19 வயது இளம் பெண் பிங்கி சைனி, அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, கல்லூரி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த 23 வயதான ரோஷன் என்ற இளைஞரை அவர் காதலித்து உள்ளார். இவர்களது காதல் சில மாதங்கள் அப்படியே சென்று உள்ளது.

இப்படியான சூழ்நிலையில், மகளின் காதல் அவரது தந்தை சங்கர் லாலுக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தந்தை சங்கர் லால், காதலன் ரோஷன் பற்றி விசாரித்து உள்ளார். அப்போது, ரோஷன் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த தந்தை சங்கர் லால், மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது மகளுக்கு அவசர அவசரமாக வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்து உள்ளார்.

இதனால், இளம் பெண் பிங்கி சைனிக்கு அவரது விருப்பம் இல்லாமலே கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று கட்டாய திருமணம் நடந்து உள்ளது. எனினும், திருமணம் நடந்த அடுத்த 3 நாட்களில் தனது பெற்றோரின் வீட்டுக்கே அந்த இளம் பெண் திரும்பி வந்துவிட்டார். அப்போது, அங்கு சில நாட்கள் இருந்த நிலையில், தனது காதலனான ரோஷன் மஹாவர் உடன், வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இதனையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் “எங்களின் பெற்றோர் எங்களை ஏதேனும் செய்து விடுவார்கள்” என்று, இளம் பெண் பிங்கி சைனி மனு அளித்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும், அந்த இளம் பெண்ணின் பெற்றோரை நேரில் வரவழைத்து “மகள் விசயத்தில், விபரீத நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது” என்று, அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, காதலன் ரோஷனுடன் சென்ற இளம் பெண் பிங்கி சைனியை, கடந்த 1 ஆம் தேதி, சங்கர் லால் மற்றும் அவரின் உறவினர்கள் 10 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

இதனையடுத்து, தனது வீட்டில் வைத்தே தனது மகள் என்றும் பார்க்காமல், அந்த இளம் பெண்ணை தந்தையான சங்கர் லால் மிகவும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

காய்கறி வியாபாரியான சங்கர் லால், தனது மகளைக் கொன்று விட்டு, அங்குள்ள கோத்வாலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து, அவரை 
கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், இதனைக் கவுரவக் கொலை என்ற சந்தேகத்துடன் சங்கர் லால் மீது போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.