“ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும், தமிழ்நாடு மறைமுகமாகவும் மத்திய அரசால் நசுக்குகிறது” என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை கூடிய இரு அவைகளிலும், பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுன. பின்னர், தொடங்கிய நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், 16 வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக காஷ்மீருக்கு இன்று சென்று உள்ளார்.

அங்கு, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “​​ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களையும் மத்திய அரசு கடுமையாக நசுக்குகிறது” என்று, குறிப்பிட்டார். 

“ஆனால், ஜம்மு - காஷ்மீர் மட்டும் மத்திய அரசின் நேரடி தாக்குதலில் உள்ளது என்றும், தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்கள் மறைமுகமாக நசுக்கப்பட்டு தாக்கப்படுகின்றன” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

“ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப்பது துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும், சட்டப்பேரவை தேர்தல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

மேலும், “நான், நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், ரஃபேல், வேலையின்மை சட்டம் திருத்தம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்னை பேச விடாமல் தடுக்கின்றனர்” என்றும், அவர் கவலைத் தெவரித்தார். 

அத்துடன், “பாஜக தலைமையிலான மத்திய அரசு நீதித்துறை, மக்களவை மற்றும் ஊடகங்களை கூட குழப்பிவிட்டனர்” என்றும், வேதனை தெரிவித்தார்.

“காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது, ​உதான் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன என்றும், பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டன என்றும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இருந்து நிபுணர்களை நாங்கள் பெற்றோம் என்றும், இங்கிருந்து இளைஞர்களை மற்ற மாநிலங்களில் பயிற்சிக்கு அனுப்பினோம்” என்றும், நினைவுகூர்ந்தார். 

“காஷ்மீர் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்” என்று, குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, “நான் உங்களுடன் இருக்கிறேன், வெற்றி அடையும் வரை தொடர்ந்து நாம் போராடுவோம் என்றும், இங்குள்ள மக்கள் அன்பையும் மரியாதையையும் எதிர்பார்க்கிறார்கள், அது கிடைக்கும் என்று, நம்புகிறார்கள் என்றும், அவர்களுக்காக நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், அதன் அடிப்படையில் ஒன்றை கருத்தில் தான் இருக்க வேண்டும்” என்றும், கூறினார். 

“வெறுப்பால் எதையும் பெற முடியாது என்றும், தொற்று நோய்களின் போது நான் இங்கு வர முயற்சித்தேன். ஆனால், ஜம்மு - காஷ்மீர் அங்கீகாரம் ரத்து போன்ற விவகாரங்களால் நான் இங்கு வர அனுமதிக்கப்படவில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“இன்று எனது குடும்பம் டெல்லியில் வாழ்கிறது என்றாலும், அதற்கு முன்பு நாங்கள் அலகாபாத்திலும், அதற்கு முன் காஷ்மீரிலும் நாங்கள் வாழ்ந்தோம்” என்றும், பழைய விசயங்களை நினைவு கூர்ந்தார். 

“என் குடும்பமும் ஜீலம் தண்ணீரைக் குடித்திருக்க வேண்டும் என்றும், எனக்கும் காஷ்மீர் ரத்தம் இருக்கிறது என்றும், நான் விரைவில் ஜம்மு மற்றும் லடாக் செல்வேன்” என்றும், ராகுல் காந்தி உறுதிப்படத் சூளுரைத்தார்.