“கைலாசா நாட்டில் தமிழகத்தின் 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று சாமியார் நித்தியானந்தா அதிரடியாக ஸ்பெஷல் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார். 

சாமியார் நித்தியானந்தா, மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. ஆனால், இந்த வழக்குகள் பற்றி அவர் துளியும் கவலைப்படாமல், அவர் பாட்டுக்கு ஜாலியாக இருந்து வருகிறார். 

அத்துடன், கைது நடவடிக்கைப் பெற்றி எல்லாம் துளிகூட கவலைப்படாத சாமியார் நித்தியானந்தா, ஈக்வேடார் அருகே “கைலாசா” என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் வேலையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.  

முக்கியாக, இந்த “கைலாசா” நாட்டில் குடியேறுவதற்கு சுமார் 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்தியானந்தா கூறி அனைவரையும் அடுத்தடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்ற எந்த தகவலும் தெரியாத நிலையில், வாரம் ஒரு முறை ஆன்லைனில் தனது பக்தர்களுக்குச் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார் நித்தியானந்தா. இதில், அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வந்த சாமியார் நித்தியானந்தா, கடந்த 2 வாரங்களாக மீண்டும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, தனது பக்தர்களை இன்ப வெள்ளத்தில் திக்குமுக்காட செய்து வருகிறார். 

அதன்படி, கடந்த வாரம் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் பேசிய சாமியார் நித்தியானந்தா, “கைலாசா நாட்டிற்கு என்று, தனி கரன்சியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கென்று புது வங்கியைத் தொடங்க இருப்பதாகவும்” அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். 

“எனக்கு நிறைய நன்கொடைகள் வந்திருக்கின்றன என்றும், அவற்றை நல்ல காரியங்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டேன் என்றும், அதற்காக நமக்கு என்று ஒரு வங்கி தொடங்க உள்ளேன்” என்றும், அறிவித்தார். 

“வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு “ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா” என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது” என்றும், நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” அவர் கூறினார். 

“கைலாசா நாட்டிற்கான பணமும் தற்போது வடிவமைக்கப்பட்டு விட்டது” என்று அதிர்ச்சியைக் கிளப்பிய சாமியார் நித்தியானந்தா, “அதில், உள்நாட்டுக்கு ஒரு 
கரன்சியையும், வெளிநாட்டுக்கு ஒர் கரன்சியையும் அச்சடித்துள்ளோம்” என்றும், அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கிளப்பினார்.

“56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும் என்றும், இந்த 56 நாடுகளில் தற்போது எது போன்ற ஒரு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ, அந்த நடவடிக்கை கைலாசாவில் அப்படியே இருக்கும்” என்றும், சாமியார் நித்தியானந்தா கூறினார். 

“கைலாசத்தின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என அனைத்தும் தங்கத்தில் இருக்கும் என்றும், தங்கம் என்பது ஒரு உலோக மட்டும் கிடையாது என்றும், அது புனிதம் வாய்ந்தது என்றும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

“கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே அச்சடிக்கப்படும் என்றும், இந்த கரன்சிகள் சமஸ்கிருதத்தில் சொர்ண முத்ரா என்று அழைக்கப்படும் என்றும், தமிழில் பொற்காசு என்றும், ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “புதிய கரன்சிகள் அனைத்தும் 1 காசு, 2 காசு, 3 காசு, 4 காசு, 5 காசு என மதிப்பீடுகளைக் கொண்டு அச்சடிக்கப்படும் என்றும், ஒரு டாலரில் 1.66 கிராம் 
தங்கம் இருக்கும் என்றும், வேதம் மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றியே கைலாசாவின் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்திருக்கும்” என்றும், விநாயகர் 

சதுர்த்தி அன்று இதெல்லாம் அறிமுகம் செய்யப்படும் என்றும், சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார். அதன்படி, விநாயகர் சதுர்த்தி அன்று அவர் சொன்னது போலவே, கைலாச நாட்டின் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அவர் வெளியிட்டார். 

இந்நிலையில், தற்போது புதிய வீடியோவில் பேசி உள்ள சாமியார் நித்தியானந்தா, “என்னுடைய கைலாச நாட்டிற்கு வருகை தரும் மக்களில் திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று, அறிவித்துள்ளார்.

மேலும், மதுரையில் இருந்து குமார் என்பவர், கைலாசா நாட்டில் தனது ஓட்டலைத் தொடங்க அனுமதி வேண்டும் என நித்யானந்தாவுக்கு கடிதம் 
எழுதினார். 

அதேபோல், திருச்சியைச் சேர்ந்த நியூ சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளரும் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கோரி இருந்தார். இதன் காரணமாக, குறிப்பிட்ட இருவருக்கும் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழில்களும் கைலாசாவில் தொடங்கப்படும் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

இதனால், தற்போது புதிய சர்சை வெடித்துள்ளது. அதாவது, “டெம்பிள் சிட்டியின் உரிமையாளர் குமார் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டது மட்டுமல்லாமல், அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவிற்கு ஆதரவு தருவது போல் செயல்பட்டதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார். இதனால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.