கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அவருக்கு தீவிரமனது என்று செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, தான் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார் எஸ்.பி.பி.

ஆனால் நாளடைவில் வயது முதிர்வினால் அவருக்கு கொரோனா நிஜமாகவே தீவிரமடையத் தொடங்கிவிட்டது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்குப் பிறகு, அவர் மிக தீவிரமான நிலையில் இருப்பதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனையே தெரிவித்தது. ஆக.13ம் தேதி நள்ளிரவு நேரத்தில் அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக மருத்துவமனை தரப்பு கூறியிருந்தது. அதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரையுலகினர் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகில் உச்ச நடிகர் ரஜினி முதல் இசையலமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என பலரும் எஸ்.பி.பி குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரார்த்தனை செய்தனர். தினமும் மாலை இதுதொடர்பாக தன் தந்தையின் அன்றைய ஹெல்த் அப்டேட்டை வெளியிட தொடங்கினார் எஸ்.பி. சரண்.

அப்படியான சூழலில், இன்று காலை எஸ்.பி.சரணின் பெயரில் ட்விட்டரில், ஒரு செய்தி வெளிவந்தது. அதில், அவருக்கு செயற்கை சுவாசம், நுரையீரல் செயலிழப்பு காரணமாக எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது இதயத்துடிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சமநிலையில் இருந்து வருவதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருந்தார் எனக்கூறப்பட்டது.

மேலும், எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று குறித்த ஆய்வில் நெகடிவ் என வந்துள்ளது என்ற பதிவினை அவரது மகன் எஸ்.பி.பி. சரண் பதிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. கொரோனா தொற்று நெகடிவ் என்றான நிலையிலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அந்த வீடியோ வதந்தி எனக்கூறி, வீடியோ வடிவில் தற்போது சரண் மற்றொரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் ``வழக்கமாக மருத்துவர்களுடன் பேசிவிட்டுதான் அப்பாவின் உடல்நிலை பற்றி உங்களிடம் கூறுவேன். ஆனால், இன்று காலை வேறு வழியின்று ஒரு பதிவு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பாவின் உடல்நிலை பற்றி என்னிடம் மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து தகவல் சொல்லப்படும். அதைத்தான் நான் பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன். 

எதிர்பாராவிதமாக, அப்பாவுக்கு கொரோனா நெகடிவ் என்று இன்று காலை செய்தியொன்று என் பெயரில் பரவி வருகிறது. அது வதந்தி மட்டுமே என்பதால் யாரும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் இப்போதும் செயற்கை சுவாசத்துடன், எக்மோ உதவியுடன்தான் இருக்கிறார். இருப்பினும் உடல்நிலை சீராக இருக்கிறது. அப்பாவின் தற்போதைய உடல்நிலை பற்றிய சரியான தகவலை மருத்துவர்களோடு கலந்தாலோசித்துவிட்டு, இன்று மாலை நானே வெளியிடுகிறேன். அதுவரை யாரும், வேறெந்த வதந்திகளையும் நம்பவேண்டாம்" என்று கூறியிருக்கிறார் சரண்.

பாடும் நிலா மீண்டு வரும் நாளுக்காக, அவர் குடும்பத்தினர் மட்டுமன்றி, அவரின் கோடானு கோடி ரசிகர்களும் பிராத்திக்கின்றனர்! மீண்டு வரட்டும் எஸ்.பி.பி!