12 வயது சிறுமியை கடத்தி, 45 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாகிஸ்தானில் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்வது, மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது போன்ற அவலமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஆமதாபாத் நகரில் வசித்து வரும் 12 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த அந்த 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல், கடத்தி சென்று 45 வயது நபர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முயன்று உள்ளனர். 

இது தொடர்பாக, அந்த பகுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த சிறுமியை அதிரடியாக  மீட்டனர். 

அத்துடன், சிறுமியை கடத்திய 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், சிறுமியை கடத்திய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், மீட்கப்பட்ட சிறுமியிடமும் போலீசார் விசாரித்து உள்ளனர். இதில், 12 வயதான சிறுமிக்கு, தற்போது 17 வயது ஆகிறது என்றும், தவறாகக் காட்டப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்று, உயர் அதிகாரிகளிடம் சிறுமியின் தந்தை முறையிட்டு உள்ளார். ஆனால், தங்களுக்கு காவல் துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது குற்றம்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் இது போன்ற அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது போல், கடந்த நவம்பர் மாதம் கூட பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் அரங்கேறி இருக்கிறது.

கராச்சி நகரில் வசித்து வரும் 44 வயதான அலி அசார் என்பவர், அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்து உள்ளார். இதற்காக, அவர் மதரசா ஜமியா இஸ்லாமியாவில் மதமாற்ற சான்றிதழும், அர்ஜூ பாத்திமா என்ற புதிய பெயருடன் திருமண சான்றிதழும் கொண்ட ஆவணங்களை அந்நாட்டு நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்து இருந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது தாய் ரீட்டாவை சிறுமி சந்திக்க விடாமல், அலி அசார் தடுத்து விட்டார் என்றும், பரபரப்பாக கூறப்பட்டது. 

இதே போன்று மற்றொரு சம்பவத்தில், கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானின் ஹசன் அப்துல் சிட்டியில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரான பிரீத்தம் சிங் என்பவரது மகள் 17 வயதான புல்பால் கவுர், திடீரென மாயமானார். இது பற்றி, டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் பிரீத்தம் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி இந்திய வெளி விவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்தது. இந்த நிலையில், சீக்கிய கமிட்டியானது, அந்த இளம் பெண் கடத்தப்பட்டு உள்ளார் என்றும், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவர் மத மாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்றும், அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.