வேலைக்குப் போவதாகக் கூறிவிட்டு மாப்பிள்ளை கோலத்தில் நின்ற கணவன், மணமகளுக்குத் தாலிகட்டக் காத்திருந்த போது, திடீரென்று தனது குழந்தைகளுடன் வந்த மனைவியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மணப்பெண்ணின் உறவினர்கள் எல்லாம் அதிர்ந்த நின்ற நிலையில், மணமகள் மட்டும் அதிராமல் இயல்பாக நின்றால், அங்கு அடுத்தடுத்து பல ட்விஸ்ட்டுகள் அரங்கேறின. 
 
ஜாம்பியா நாட்டில் தான் இப்படி ஒரு ஆச்சரிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

அதே நேரத்தில் ஆபிரகாம், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்படி தான் சம்பவத்தின் போதும், ஆபிரகாம் வழக்கம் போல் வேலைக்குச் செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார்.

ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய ஆபிரகாம், நேராக தன்னுடைய அலுவலகம் செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் சென்று உள்ளார். அதுவும், மணக்கோலத்தில். அந்த தேவாலயத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்த திருமணத்தில் தான், ஏற்கனவே 3 குழந்தைகளின் தந்தையான ஆபிரகாம் தான், மணமகளுடன் மணக்கோலத்தில் அருகில் நின்றுகொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அந்த திருமண விழாவிற்கு வருகை தந்திருந்த அவர்களது குடும்ப நண்பர் ஒருவர், மணக்கோலத்தில் ஆபிரகாமைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனே, இது குறித்து தகவலை ஆபிரகாமின் மனைவிக்குத் தெரியப்படுத்தி உள்ளார். இதனால், பதறிப்போன அவரின் மனைவி தன்னுடைய 3 குழந்தைகளையும் அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு, திருமணம் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேவாலயத்திற்குள் நுழைந்து உள்ளார்.

தேவாலயத்தில் நுழைந்ததும், திருமண ஜோடிகளைப் பார்த்து உள்ளார். அங்கு, மணமகள் உடன் மணக்கோலத்தில் தன்னுடைய கணவன் நின்றிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். அப்போது, மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலையில், தேவாலயத்திற்குள் அலறித்துடித்துள்ளார் அந்த பெண். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்து உள்ளனர்.

அப்போது, “இந்த திருமணம் நடக்கக் கூடாது. உடனே திருமணத்தை நிறுத்துங்கள்” என்று அந்த பெண்மணி கூச்சலிட்டு உள்ளார். இதனால் அந்த தேவாலயத்தில் இருந்தவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியுடன் அந்த பெண்ணை பார்த்து உள்ளனர்.

மேலும் பேசத் தொடங்கிய அந்த பெண், “இங்கு மணமகன் கோலத்தில் நிற்பவர் என்னுடைய கணவர். அவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆக வில்லை. நாங்கள் இருவரும் இன்று காலை வரை சந்தோசமாகத் தான் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ஆனால், இங்கு எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது?” என்று, அந்த பெண் சத்தம் போட்டு உள்ளார்.

அதோடு “ 'நான் வேலைக்குச் சென்று வருகிறேன்' என்று, அவர் என்னிடம் காலையில் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார். ஆனால், இப்போது இந்த கோலத்தில் அவரை பார்த்து நான் வியக்கிறேன்” என்று அந்த பெண் கூறி சத்தம் போட்டு உள்ளார். 

இதனையடுத்து, மணக்கோலத்திலிருந்த ஆபிரகாம், தன் மனைவியிடம் தன்னுடைய சூழ்நிலையையும், தனக்கு நடந்ததையும் கூறி உள்ளார். 

இந்த சம்பவத்தால் மணப்பெண்ணின் குடும்பத்தார் கடும் அதிர்ச்சியில் உறைந்து நின்று அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால், அருகில் நின்ற மணமகள் மட்டும், எந்த சலனமும் பதற்றமும் இல்லாமல் இயல்பாய் அங்கு நின்று கொண்டிருந்தார். இதனை கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த பெண்ணிடம் “இங்கு இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீ மட்டும் ஒன்றும் பேசாமல் இயல்பாய் நிற்கிறாயே?” என்று, கேட்டு உள்ளனர். 

அப்போது, எந்த பதற்றமும் இல்லாமல் இயல்பாய் பதில் அளித்த அந்த மணப்பெண், “ஆபிராகாமிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும்” என்று, கூறியுள்ளார். இதனைக் கேட்டு அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அங்க பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ஜாம்பியா நாட்டில் பாரம்பரிய திருமண சட்டத்தின் படி, ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால், தற்போது மாற்றப்பட்டு உள்ள புதிய சட்டத்தின் படி பல திருமணங்கள் செய்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து, பெண்ணின் உறவினர்கள் அளித்த தகவலின் படி, தேவாலயத்திற்கு வந்த போலீசார், ஆபிரகாமைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.