திருமணத்தில் தலையில் விக் வைத்து ஏமாற்றிய கணவன் மீது மனைவி மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ராஜசேகர், கடந்த 2015 ஆம் ஆண்டு இணையவழி திருமணத் தகவல் நிலையமான மேட்ரிமமோனியல் மூலமாக வரண் பார்த்துள்ளார். 

அதன் படி, மணமகன் ராஜசேகருக்கும், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் இடையே இரு வீட்டார் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக, 50 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், திருமணத்திற்குப் பிறகு, பல வருடங்கள் ராஜசேகரன் தனது மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

மனைவியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ஒரே ஒரு முறை மட்டுமே, கணவன் ராஜசேகர் தன் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்றும், கூறப்படுகிறது. அப்போது, ராஜசேகரின் தலையில் வைத்திருந்த விக் கழன்று விழுந்து இருக்கிறது. இதனால் ராஜசேகருக்கு வழுக்கைத் தலை என்பது அப்போது தான், அவரது மனைவிக்குத் தெரிய வந்துள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, “தலையில் முடி இருப்பது போல், விக் வைத்துக் கொண்டு மேட்ரிமோனியில் புகைப்படத்தைப் பதிவிட்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும்” அப்போது அவருக்குத் தெரியவந்தது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், கணவனிடம் சண்டை போடும் போது, தனது வீட்டின் சார்பாக வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட 50 சவரன் நகைகளை ராஜசேகர் செலவு செய்துவிட்டு, வங்கியில் இருப்பதாகக் கூறி பொய்யாகக் கூறி வந்துள்ளது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த கணவன், மனைவி அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த பிரச்சனை தொடர்பாகத் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, தன் கணவன் மீது அவரது மனைவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணத்தில் தலையில் விக் வைத்து ஏமாற்றிய கணவன் மீது மனைவி மோசடி புகார் அளித்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.