நடிகை வனிதாவின் திருமணம் தொடர்பாக நமூக வலைத்தளங்களில் நடைபெறும் விவாதம் காவல் நிலையம் வரை பேச்சுவார்த்தைக்குச் சென்ற நிலையில், சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றும், அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகையான வனிதா, சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். தனக்குச் சொந்தமான அந்த யூட்யூப் சேனலில் பீட்டர் பால் என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது, வனிதாவிற்கும் - பீட்டர் பாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர்.

அதன்படி, கடந்த மாதம் நடிகை வனிதா, பீட்டர் பாலை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். நடிகை வனிதா - பீட்டர் பால் திருமண வைபோக வீடியோ மற்றும் புகைப்படங்கள், கடந்த மாதம் மிகப் பெரிய அளவில் வரலானது. இதனால், கடந்த மாதம் பெரும்பாலும் வனிதா திருமணம் பற்றித்தான் பலரும் பேசத் தொடங்கினர். இதனால், வனிதாவின் திருமணம் தமிழகத்தில் பேசும் பொருளுமாக மாறியது. இதற்கு முக்கிய காரணம், வனிதாவின் கடந்த கால திருமண வாழ்க்கை ஒரு காரணமாகவும் அமைந்திருந்தது.

வனிதா - பீட்டர் பால் திருமண தகவல் வெளியான அடுத்த நாளே, பீட்டர் பாலின் மனைவி எலிசபத், காவல் நிலையத்தில் தனது கணவர் மீது அதிரடியான புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “எனது கணவர் பீட்டர் பால் என்னிடமிருந்து முறைப்படி விவாகரத்து வாங்காமல், அவர் நடிகை வனிதாவைத் திருமணம் செய்ததாக” குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நடிகை வனிதாவும், எலிசபெத்தும் தங்கள் தரப்பு நியாயங்களை வீடியோவாக பேசி யூடியூப்பில் வெளியிட்டு வந்தனர். இது, தமிழக அளவில் வைரலானது. 

இதனையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவுக்கு எதிராகவும், வனிதாவின் ஸ்டைலிலேயே ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி, மதுரையைச் சேர்ந்த சூர்யா தேவி என்பவர் பொதுமக்களில் ஒருவராக நியாயம் கேட்பதாகக் கூறி, தனது கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

இதனால், நடிகை வனிதாவிற்கும் - பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்குமான பிரச்சனை; சூர்யா தேவிக்கும் - வனிதாவுக்குமான பிரச்சினையாக உருமாறியது. இதனால், தங்கள் வெளியிடும் வீடியோவிலேயே இருவரும் அநாகரிகமான முறையில் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்டனர்.

வீடியோ சண்டையின் உச்ச கட்டமாக நடிகை வனிதா, சூர்யா தேவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடமும் புகார் அளித்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில், சூர்யா தேவியும், நடிகை வனிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “நடிகை வனிதா மற்றும் அவருடைய வழக்கறிஞர் தன்னை கஞ்சா வியாபாரி என்று கூறியதையும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனால், ஒட்டுமொத்த தமிழகமும் இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்தது. இருவரின் புகார்கள் மற்றும் வசைபாடல்களையும் தமிழக மக்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை வனிதா - சூர்யா தேவி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்த சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இருவரையும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்படி, இருவரும் ஆஜர் ஆனார்கள் அவர்களிடம் போலீசார் சமரசம் பேச முயன்றனர். சுமார் 3 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. 

அப்போது, இருவரையும் சமாதானமாகச் செல்லும் படி போலீசார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், சமாதானமாகச் செல்ல சூர்யா தேவி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, இருவருக்கும் இடையேயான வீடியோ சண்டை மீண்டும் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.