இணையதளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி திரைப்படங்கள் போன்றவற்றை இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டு வருவதற்கான அரசாணையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் (நவம்பர் 11) வெளியிட்டிருந்தார்.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது குறித்து பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

பொதுவாக திரையரங்கிற்கு செல்லும் முன்னர் படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்படும். ஆனால்,ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இத்தகைய ஒழுங்குமுறை கிடையாது. இதனால் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் படங்களில் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, `மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது' என்று உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் வகையில்தான், தற்போது இணையதளங்களில் பதிவேற்றப்படும் சினிமா செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஓ.டி.டி இணைய தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், தொடர்கள், ஆணவப் படங்கள் ஆகியவற்றை வெளியிடும் முன்பாக உரிய அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை விரைவில் மத்திய அரசு வெளியிடவிருக்கிறது.

ஓ.டி.டி. தளங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு கீழ் கொண்டு வரப்படும் நிலையில், இன்று (நவம்பர் 12) தொலைக்காட்சி விளம்பரங்களுக்கான சுதந்திரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது;-

“தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் விதமாக அமைந்துள்ளன. இத்தகைய விளம்பரங்களுக்கு தணிக்கை எதுவும் இல்லை. 

இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு, பல இளம்பருவத்தினர் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதனை மீறி ஒளிபரப்புபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் இருந்தால் அவற்றை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்

இந்த வழக்கின் விசாரணையில், அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும், தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஓ.டி.டி. விஷயத்தில், அரசின் நடவடிக்கைகள் சமூக ஊடகங்கள், இன்டர்நெட் உலகில் இதுவரை நிலவி வந்த கருத்து, பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மாறுகிறதா என்ற சர்ச்சையை இந்திய அரசின் நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது நீதிமன்றத்தின் கருத்து, அடுத்தகட்ட விவாதங்களை எழுப்பி வருகின்றன.