ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
 
இனி வரக்கூடிய காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் அனைவருக்கும், ஆயுள் முழுவதும் செல்லுபடியாக கூடியவகையில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆயுள் சான்றிதழ் மீட்டிற்கு வழங்குவது பற்றி சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு கூறியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைந்து, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில், தேசிய கல்விக் குழுமம் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தேசிய கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது.  ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து  முடிவெடுக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும். ஏற்கனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் தகுதிக்காலத்தை வாழ்நாள் முழுவதற்கும் செல்லும்  வகையில் நீட்டிப்பது குறித்து விரைவில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ள போதிலும், அது ஒரு நடைமுறை தான். அடுத்த ஒரு சில நாட்களில் அது தொடர்பாகவும் சாதகமான அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்விக்குழு  வெளியிடும் என்று நம்புகிறேன். இக் கோரிக்கையை பா.ம.க. தான் முதலில் எழுப்பியது என்பதில் மகிழ்ச்சி. இதற்காக ஆசிரியர் கல்விக்குழுவுக்கு நன்றிகள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வழங்கப்படும் சான்றிதழின் தகுதிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். ஆசிரியர் தகுதித்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக வேலை கிடைத்து விடும் என்று நம்பப்பட்டது. அதைப்போலவே முதலில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் போதிய எண்ணிக்கையில் காலியிடங்கள் இல்லாத நிலையில் 2013&ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை கிடைக்கவில்லை; அவர்களின் தகுதிச் சான்றிதழ் காலம் நடப்பாண்டில் முடிவடையவிருக்கும் நிலையில், ஆசிரியர் கல்விக்குழு எடுத்துள்ள இந்த முடிவு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்பது உண்மை.

தமிழ்நாட்டில் மட்டும் 80,000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்துள்ளனர். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக்குழு முடிவெடுத்து அறிவித்தால், அது அவர்களுக்கு செய்யப்படும் பெரும் நன்மையாக இருக்கும். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர் பணிக்கு  தகுதி பெறுவதற்கான தேசிய, மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (NET/SET) வென்றோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே, ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச்சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதற்கு நீட்டிப்பதில் தவறு இல்லை. அதற்கான அறிவிப்பு விரைந்து வெளியிடப்பட வேண்டும்.

அதே நேரத்தில் ஆசிரியர் தகுதிச்சான்றிதழ் காலம் நீட்டிக்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அனைவரும் பயனடையும் வகையில் ஆசிரியர் நியமனங்களை தமிழ்நாடு  அரசு மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும். ஆசிரியர், மாணவர் விகிதம் மாநில அளவில் கணக்கிடப் படுவதால் தான் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் மாணவர் விகிதத்தை பள்ளி அளவில் கணக்கிடுவது தான் சரியானதாக இருக்கும். எனவே, பள்ளி அளவில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, அதனடிப்படையில் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"

என்று குறிப்பிட்டுள்ளார்.