மனைவி குளிப்பதை எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை, கணவன் காது கிழிய அடித்து துவம்சம் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரம் பம்மல் சரஸ்வதி புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு, கடந்த மாதம் தான் புதிதாகத் திருமணம் ஆகி உள்ளது. புதுமண தம்பதிகள், தங்களுக்கே உண்டான காதலோடும், புரிதலோடும் தங்களது இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கி இருக்கின்றனர்.

இவர்களது பக்கத்து வீட்டில், தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டடம் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில், விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயதான மூர்த்தி என்பவர், அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை கொரோனா முழு ஊரடங்கு என்பதால், கட்டட வேலை எதுவும் இல்லாமல் கட்டுமான வேலை நடைபெறும் அதே கட்டடத்தில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார்.

அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டில் புதிதாகத் திருமணம் ஆன அந்த புதுமண பெண் குளிக்கச் சென்றுள்ளார். அந்த குளியலறையில் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்ட உடன், மூர்த்தி அந்த வீட்டின் குளியல் அறையை எட்டிப் பார்த்து உள்ளார்.

இதனைப் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டுக் கூச்சலிட்டு உள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அந்த பெண்ணின் கணவன், மூர்த்தியை பிடித்து காது கிழிய அடித்து உள்ளார். இதில், அவருக்குக் காதில் ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில், அவரை ஒப்படைத்து உள்ளார்.

மேலும், மூர்த்தி மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், மூர்த்தியை கைது செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக போலீசார் மூர்த்தியை நீதிபதி முன் அவர் ஆஜர் படுத்தி பின்னர், சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.