புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், 10 க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமாகி உள்ளது. 

புதுச்சேரி வில்லியனூர் கீழ் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த 53 வயதான கன்னியப்பன் என்பவர், அங்குள்ள கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையைக் கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பணியிலும் கன்னியப்பன் ஈடுபட்டு வந்தார். இதற்காக, வெளியூர்களில் வசிக்கும் மிகவும் ஏழ்மையான கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பணம் கொடுத்து, சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து இது போன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார். 

இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த சிறுமிகளும் சிலர் இருந்தனர். இவர்களை கோர்க்காடு பகுதியில் மட்டுமல்லாது, அங்குள்ள வானூர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் இந்த பகுதியில் வாத்து மேய்ப்பதற்காக கன்னியப்பன் அனுப்பி வைத்து வேலை வாங்கி வந்தார். 

தமிழகப் பகுதிகளில் தொடர்ந்து சிறுமிகள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சிலர், இது குறித்து அந்த மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு ரகசியத் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக, புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், தனது குழுவினருடன், சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுமிகளை பத்திரமாக மீட்டனர். 

மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தியதில், “அவர்களைப் போல் மேலும் சில சிறுமிகள், அங்குள்ள வில்லியனூர் அருகே உள்ள கோர்க் காட்டில் வீட்டில் அடைத்து வைத்து, பண்ணை தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் பல அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்களை” அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, வில்லியனூரை அடுத்த கோர்க்காடுக்கு சென்ற அதிகாரிகள், அங்குள்ள ஒரு வீட்டில் சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பிடித்து, உடனடியாக போலீசாரின் உதவியுடன் சிறுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து, அந்த சிறுமிகளை அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். 

தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், “வெறும் 3 ஆயிரம் ரூபாயை சிறுமிகளின் பெற்றோரிடம் கொடுத்து சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க வைத்து இருந்ததாகவும், பண்ணையில் அடைத்து வைத்து அவர்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமைப் படுத்தி வந்ததாகவும்” பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் கண்ணீர் மல்க கூறினர்.

முக்கியமாக, “பண்ணையில் இருக்கும் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து விடுவதோடு, யாரும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்றும், சாப்பாடு மட்டும் கொடுக்கப்படும்” என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறியுள்ளனர். 

குறிப்பாக, “பண்ணையில் உள்ளன கன்னியப்பன் உள்பட பலர் கஞ்சா, மது, போதை பொருட்களைச் சிறுமிகளுக்கு கொடுத்துத் தொடர்ந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து” வந்ததும் தெரிய வந்தது. 

இவை தவிர, “சினிமாவில் வருவது போல் சிறுமிகளைக் கட்டி வைத்து, சிறுவர்கள் உள்பட பலர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்தது. இப்படி, எதுவுமே தெரியாமலேயே அந்த சிறுமிகள், நீண்ட நாட்களாக இப்படி பல விதமான கொடுமைகளை அனுபவித்து வருவதும் இந்த விசாரணையில் தெரிய வந்தது. 

அத்துடன், இந்த வழக்கில்,  5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், 10 க்கும் மேற்பட்டோர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமாகி உள்ளது. 

இதன் காரணமாக, சிறுமிகள் உடல் மற்றும் மன ரீதியாக கடுமையாகப் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவைருக்கும் உடல் நலம் சார்ந்தும், மன நலம் சார்ந்தும் தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த வழக்கில் இது வரை 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதால், இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.  

இந்த வழக்கு தொடர்பான அனைத்து கள விசாரணை அறிக்கைகளை, தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவருக்கு அதன் உறுப்பினர் ஆனந்த் தற்போது அனுப்பி வைத்து உள்ளார்.