சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் 5 பேரும் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு, கைதிகள் நெருங்காத அளவிற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் 

இருவரும் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தனர். குறிப்பாக, தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 

இது குறித்து, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரணை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார். 

குறிப்பாக, “போலீசை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று போலீசார் மகாராஜன் பேசியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், “ஜெயராஜ் - பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்” என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை நேரில் காவலர் ரேவதியின் சாட்சி சொல்லி உள்ளதாகவும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதனையடுத்து, இதனையடுத்து, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான் குளம் காவல் நிலையம் வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு எடுத்து வழக்குப் பதிவு செய்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, லாக்கப் டெத் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 5 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், என 2 போலீசாரும் முதலில் ஒருவர் பின் ஒருவராக நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அத்துடன், எஸ்.ஐ. ரகு கணேஷ், காவலர் முத்துராஜ் ஆகியோரம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர், அந்த 5 போலீசாரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். குறிப்பாக, அவர்களைத் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்குமாறு நீதிபதி ஹேமா உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, 5 போலீசாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரிய ஹால் போல் காணப்படும் அந்த சிறையில், தனிப்பட்ட வசதிகள் எதுவும் இன்றி அனைத்து கைதிகளுடனே தங்க வைக்கப்பட்டனர். இங்கு மொத்தம் 130 கைதிகளைத் தங்க வைக்கும் வசதி இருந்தும், தற்போது கைதான சாத்தான்குளம் போலீசார் 5 பேரையும் சேர்த்து மொத்தம் அங்கு 59 கைதிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

இதனால், இங்கு உள்ள மற்ற கைதிகளைப் பார்த்து அந்த 5 போலீசார் பயந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு குறைவு காரணத்தைக் கூறியும், இங்குள்ள வசதிகள் போதவில்லை என்பதைக் கூறியும், கைதான சாத்தான்குளம் போலீசார் 5 பேரும் நேற்று இரவு மதுரை மத்திய சிறைக்கு மாறி உள்ளனர். 

மதுரை மத்தியச் சிறையில் அந்த 5 பேருக்கும், தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகள், அந்த 5 பேரையும் நெருங்க முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

கைதான சாத்தான்குளம் போலீசார் 5 பேர் மீதான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடப்பதால், அவர்களைத் தூத்துக்குடி சிறையில் தான் அடைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர்கள் 5 பேரும் தற்போது மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த விவகாரமும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, மதுரையில் அடைக்கப்பட்ட இந்த 5 போலீசாரும், மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்குக் கூடுதலாக சலுகைகள் மற்றும் வசதிகள் எதுவும் செய்து தரக்கூடாது என்ற கண்டன குரல்களும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.