சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசார் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி  முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் நேற்று வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த வழக்கில், சம்மந்தபட்ட சாத்தான்குளம் எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ்  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை ஆகியோரை சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்கள் 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

எனினும், சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தில், ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசார் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

அதன்படி, “சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தில் தொடர்புடைய ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை, தமிழக அரசு கலைக்க வேண்டும் என்று, எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அத்துடன், “ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? யார், யாரை கொண்டு உருவாக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பது பற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியவில்லை” என்றும் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் லத்தியை தொடவே சட்டத்தில் இடமில்லாத போது, அந்த லத்தியால் தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்?” என்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார். அத்துடன், “ஆர்வக்கோளாறில் சினிமா படங்களை பார்த்து சிலர் செய்யும் பைத்தியகாரத்தனத்தால் பல இடங்களில் பிரச்சனைகள் வருவதாகவும், மக்களை சீண்டினால் யாரும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதை ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் உள்ளவர்கள் உணர வேண்டும் என்றும், அல்லது போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்” என்றும், வழக்கறிஞர் பரந்தாமன் வலியுறுத்தினார்.

அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி முருகன், “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு காவல்துறை விசாரணையில் தலையிட உரிமை இல்லை” என்று திட்டவட்டதாக கூறினார். “காவல்துறை விசாரணையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தலையிட முடியாது என்றும், அவர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.

இதனால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு எதிராக செய்திகள் தொடர்ந்து வெளியானதால், “பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு என்று நன்மதிப்பு உள்ளது அதனைக் கெடுக்கும் வேலையில் யாரும் ஈடுபட வேண்டாம்” என்று கூறி, ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவத்தை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உடன் சம்பந்தப்படுத்தி வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், கடும் எச்சரிக்கை விடத்திருந்தது.

இந்நிலையில், சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவத்தின் போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் 5 பேர் பணியில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், அவர்களை அழைத்து விசாரிக்க நினைத்த தென்மண்டல ஐஜி முருகன், சம்பவத்தின் போது, பணியில் இருந்ததாக கூறப்படும் 5 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது, அந்த 5 பேரும் தங்கள செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தலைமறைவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், அந்த 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால், தலைமறைவாக உள்ள அந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் 5 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினால் மட்டுமே, இந்த வழக்கில் உண்மை என்ன என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இந்த வழக்கில் நேற்று வரை தலைமை காவலர் முத்துராஜை தேடி வந்த நிலையில், இனி இந்த வழக்கில் தொடர்புடைய பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 5 பேரையும் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, நேற்று இரவு கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜுவின் வாகனம் கண்டெக்கப்பட்ட கீழமங்கலம் கிராமத்தை ஒட்டி உள்ள 2 கிராமங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் அந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 5 பேரும் பதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் அவர்களை கண்டுப்பிடித்து விடலாம் என்றும், சிபிசிஐடி போலீசார் நம்புகின்றனர்.